Thursday 27 March 2014

மன்னார் இணையத்தின் (Newmannar.com) அனுசரணையுடன் தழல் இலக்கியவட்டத்தின் ம...

Monday 11 March 2013

இராத்தங்காத ஓர் இரவு


ஏழை குழந்தைக்கு
உணவு

எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென

எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்

ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு

எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
                  -- மன்னார் அமுதன்

Thursday 28 February 2013

நல்லுமரமும் ராசாதிண்ணையும்


பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்

ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு

ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்

விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்

ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை

ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன

பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு

இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
                  --மன்னார் அமுதன்





Friday 22 February 2013

பேயோன்


தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்

கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்

பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்

ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்

வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி

வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்

அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்

அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்

  -- மன்னார் அமுதன்

Friday 15 February 2013

அழுக்குக் குறிப்புகள்

(ழுக்)குக் குறிப்புகள்

கிழிசல் உடைகள்
வெட்டாத நகங்கள்
மூக்கு முடிகளென
எங்கும் அழுக்கு

பெருவிருட்சத்தின் 
விழுதுகளாய்
தொங்கிக் கிடக்கிறது 
சடையும் தாடியும்

வெட்டப்பட்ட விரல்கள்
சீழ் வடியும் புண்களென
நெளிந்து கிடக்கிறது
அவன் அன்றாடம்

குடலைக் குமட்டும்
அழுக்குகளின் 
திரட்சியாய் அவன்..

விலகிக் 
கடந்து செல்கையில்
அழுக்காகி விடுகிறது மனசு

காவிப்பல் தெரிய 
நட்பாய் சிரிக்கையில் 
அழகாகிவிடுகிறான் அவன்...
             
                -- மன்னார் அமுதன் 

Wednesday 6 February 2013

தந்தையாயிருத்தல்


அவருக்கும் எனக்குமான 
உறவுச் சுவரில் 
வேர் பரப்பியிருந்தது
விரிசல் 

ஒரு முறையேனும்
முறை சொல்லி
அழைத்ததாய் நினைவில்லை
கடந்த காலங்களில்

மீசை அரும்பாதவரை
கக்கத்தில் முகம்
புதைத்துக் கிடந்ததைச்
சொல்கிறாள் அம்மா

எனது 
வெற்றிகளுக்காக
தோல்விகளைத் தோளில்
சுமந்தவனென்கிறாள்
பாட்டி

என்
மதிப்பெண்களை
கல்லூரிகளுக்கு 
காவித் திரிந்ததில்
அவரின்
கால் செருப்பு அறுந்த
கதை சொல்கிறாள் தங்கை

சேக்காளிகளோடு
சண்டைபிடித்து
மண்டையுடைந்து வந்தபோது
மருந்திட்டதை ஞாபகப்படுத்துகிறான்
தம்பி

புறக்கணிப்பின்
எல்லாக் கணங்களிலும்
அவர் தந்தையாய் இருந்தார்

நான்தான்
கயிறை அறுக்கும் 
கன்றுக்குட்டியாய்..
                 -- மன்னார் அமுதன்


இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!