இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
தாயகத்திலும் இங்கு என்ரை வீட்டிலும் கிளிப்பிள்ளை பெத்தம்மா பச்சைக்கிளி என்று பல பெயர்களும் சொல்லி ஆசையாக கிளி வளர்த்தனான். அவற்றின் அழகில் மயங்கியிருந்த ஞாபகம் வந்தது. அதுதான் இந்தப்பதிவு.
கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை. இப்பொழுதும் நான் என்ரை வீட்டில் என்ரை வீட்டில் செல்லம்மா, மகள், மருமகள் என்று மூன்று அழகான பேசும் கிளிகளை ஆசை ஆசையாக வளர்க்கிறன் ஆனால் இப்ப நான் சொல்லவாறது இந்த கிளிகளைபற்றி இல்லை. எங்கட தாயகத்தில் வாழும் பச்சைக்கிளிகளைப்பற்றி.
பாவம் இந்த கிளிகள் இவற்றின் அழகும், இனிமையாக பேசும் திறமையுமே இவற்றிற்கு எதிரியாகிபோனது. தாயகத்தில் பலவீடுகளிலும் செல்லப்பிராணியாக கூண்டில் அடைக்கப்பட்டு விட்டன.
கூறிய ஒரு விடயத்தையே திரும்பத்திரும்ப அதேபோல சொல்லிக்கொண்டு இருப்பவர்களை கிளிப்பிள்ளைபோல பேசுகிறான் என்றும், நீண்டு வளைந்த மூக்கு உடையவர்களை கிளிமூக்கன் என்றும் கூறுவது எங்கள் கிராமங்களில் வழமை.
ஈழத்தில் சாதாரண பச்சைக்கிளி, கழுத்தில் மாலை கட்டியதுபோல சிவப்புநிறத்தில் ஒரு வட்டக்கோட்டுடன் காணப்படும் கிளி என இரண்டு வகை கிளிகள் மட்டுமே காணப்பட்டாலும் அமேசன் காடுகள் தென்னாபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா என உலகின் பல பாகங்களிலும்மாக 75 இற்கு மேற்பட்ட கிளி இனத்தை சேர்ந்த பறவைகள் வாழ்கின்றன.
கிளிகள் மாம்பழம் நெற்கதிர், மிளகாய்ப்பழம், பயற்றங்காய் போன்றவற்றை விரும்பி உண்ணும்.
ஊரிலுள்ள தோட்டங்களில் மிளகாய் செடி பயிரிடப்படும் காலங்களில்லும் மாம்பழம் காய்த்து பழுக்கும் காலங்களிலும் சிறு சிறு கூட்டம் கூட்டமாக வந்து மிளகாய் பழங்களையும் மாம்பழங்களையும் ஒரு வழிபண்ணிவிடும். இதனால் தோட்டக்காரர்களுக்கு இவற்றை பிடிக்காது.
இவை பெரும்பாலும் தென்னை, பனை போன்ற மரங்களில் காணப்படும் பொந்துகளில் வாழும்.
கிராமங்களில் தாய்மார்கள்
பச்சை கிளியே வா வா வா
பாலும் சூறும் உண்ண வா
என்று பாடிக்கொண்டு தமது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது வழமை.
எமது நாட்டு கிளிகள் இலங்கை முத்திரையிலும் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.
இது ஜேர்மனியில் நாங்கள் கொஞ்சக்காலத்துக்குமுன் கொஞ்சிக் கொஞ்சி பாசமாக வளர்த்த கிளி. எனது தோளில் உட்கார்ந்து இருக்கும்போது எடுத்த படம். சென்ற வருடம் எமது வீட்டிற்கு புதிதாக வர்ணம் பூசும்போது வர்ணக்கலவையிலுள்ள இரசாயன பொருட்களின் மணத்தை சுவாசித்ததில் இந்த கிளி அநியாயமாக இறந்துவிட்டது இன்றும் மறக்கமுடியாத எங்கவீட்டின் சோகங்களில் ஒன்று.
இளையராஜாவை உச்சங்களிற்கு அழைத்து செல்ல அத்திவாரமிட்ட இந்த அன்னக்கிளி உன்னை தேடுதேயையும் மீண்டும் ஒரு தடவை கேட்டு ரசிப்போமே
மீண்டும் மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கும்வரை நேசமுடன் விடை பெறுவது,
அம்பலத்தார்
|