Wednesday 11 April 2012

நான் வளர்த்த பச்சைகிளி

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

தாயகத்திலும் இங்கு என்ரை வீட்டிலும் கிளிப்பிள்ளை பெத்தம்மா பச்சைக்கிளி என்று பல பெயர்களும் சொல்லி ஆசையாக கிளி வளர்த்தனான். அவற்றின் அழகில் மயங்கியிருந்த ஞாபகம் வந்தது. அதுதான் இந்தப்பதிவு.


கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை. இப்பொழுதும் நான் என்ரை வீட்டில் என்ரை வீட்டில் செல்லம்மா, மகள், மருமகள் என்று மூன்று அழகான பேசும் கிளிகளை ஆசை ஆசையாக வளர்க்கிறன் ஆனால் இப்ப நான் சொல்லவாறது இந்த கிளிகளைபற்றி இல்லை. எங்கட தாயகத்தில் வாழும் பச்சைக்கிளிகளைப்பற்றி.


பாவம் இந்த கிளிகள் இவற்றின் அழகும், இனிமையாக பேசும் திறமையுமே இவற்றிற்கு எதிரியாகிபோனது. தாயகத்தில் பலவீடுகளிலும் செல்லப்பிராணியாக கூண்டில் அடைக்கப்பட்டு விட்டன.



கூறிய ஒரு விடயத்தையே திரும்பத்திரும்ப அதேபோல சொல்லிக்கொண்டு இருப்பவர்களை கிளிப்பிள்ளைபோல பேசுகிறான் என்றும், நீண்டு வளைந்த மூக்கு உடையவர்களை கிளிமூக்கன் என்றும் கூறுவது எங்கள் கிராமங்களில் வழமை.



ஈழத்தில் சாதாரண பச்சைக்கிளி, கழுத்தில் மாலை கட்டியதுபோல சிவப்புநிறத்தில் ஒரு வட்டக்கோட்டுடன் காணப்படும் கிளி என இரண்டு வகை கிளிகள் மட்டுமே காணப்பட்டாலும் அமேசன் காடுகள் தென்னாபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா என உலகின் பல பாகங்களிலும்மாக 75 இற்கு மேற்பட்ட கிளி இனத்தை சேர்ந்த பறவைகள் வாழ்கின்றன.



கிளிகள் மாம்பழம் நெற்கதிர், மிளகாய்ப்பழம், பயற்றங்காய் போன்றவற்றை விரும்பி உண்ணும்.



ஊரிலுள்ள தோட்டங்களில் மிளகாய் செடி பயிரிடப்படும் காலங்களில்லும் மாம்பழம் காய்த்து பழுக்கும் காலங்களிலும் சிறு சிறு கூட்டம் கூட்டமாக வந்து மிளகாய் பழங்களையும் மாம்பழங்களையும் ஒரு வழிபண்ணிவிடும். இதனால் தோட்டக்காரர்களுக்கு இவற்றை பிடிக்காது.



இவை பெரும்பாலும் தென்னை, பனை போன்ற மரங்களில் காணப்படும் பொந்துகளில் வாழும்.




கிராமங்களில் தாய்மார்கள்
பச்சை கிளியே வா வா வா
பாலும் சூறும் உண்ண வா
என்று பாடிக்கொண்டு தமது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது வழமை.




எமது நாட்டு கிளிகள் இலங்கை முத்திரையிலும் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.





இது ஜேர்மனியில் நாங்கள் கொஞ்சக்காலத்துக்குமுன் கொஞ்சிக் கொஞ்சி பாசமாக வளர்த்த கிளி. எனது தோளில் உட்கார்ந்து இருக்கும்போது எடுத்த படம். சென்ற வருடம் எமது வீட்டிற்கு புதிதாக வர்ணம் பூசும்போது வர்ணக்கலவையிலுள்ள இரசாயன பொருட்களின் மணத்தை சுவாசித்ததில் இந்த கிளி அநியாயமாக இறந்துவிட்டது இன்றும் மறக்கமுடியாத எங்கவீட்டின் சோகங்களில் ஒன்று.










இளையராஜாவை உச்சங்களிற்கு அழைத்து செல்ல அத்திவாரமிட்ட இந்த அன்னக்கிளி உன்னை தேடுதேயையும் மீண்டும் ஒரு தடவை கேட்டு ரசிப்போமே




மீண்டும் மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கும்வரை நேசமுடன் விடை பெறுவது,
அம்பலத்தார்

Wednesday 4 April 2012

என்று தீரும் இந்த சாதி வெறி??

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..

"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!

மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!

மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!

சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!

மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"

சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
மைந்தன் சிவா.

Monday 2 April 2012

ஈழமும்,கிராமப்புற வாழ்வும்!

நகர மயமாக்கல் என்பது கிராம புறங்களை சிறிது சிறிதாக ஆட்க்கொண்டு வந்தாலும், மறுபுறம் அக்கரைப் பச்சை என்பது போல நகர் புறத்தை நோக்கி சில பல காரணங்களால் கிராமங்கள் ஓட்டம் பிடித்தாலும், இந்த கிராமப்புற வாழ்க்கை என்பது சொர்க்கத்திலும் கிடைக்காத ஒன்று தான்; இதை கிராமப்புற வாழ்க்கையில் இருந்து நகர்ப்புறம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்த ஒருவனால் நன்றாகவே உணர்ந்து கொள்ளக்கூடியதாக  இருக்கும்.

காற்றையும் வழி மறித்து நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், எந்நேரமுமே எம்மை வெறுப்பேற்றும் வாகன இரைச்சல், துன்பம் ஒன்று வரும் போது உணரப்படும் தனிமை, விடுமுறைகளின் போது எம் உணர்வுகளை கூட பகிர்ந்து கொள்ள முடியா வண்ணம் இடை வெளி நிரப்பி நிற்கும் இலத்திரனியல் சாதனங்கள் என்று ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்க்கை சுழலுவது போல நகர் புற வாழ்க்கை எண்ணத் தோன்றும்.

பணம், வசதியான வீடு, சிறந்த வாழ்க்கை தரம் என்று நகர் புறங்களிலே என்ன தான் சௌகரியம் இருந்தாலும் கிராம புற வாழ்வில் தனி இன்பம் இருப்பதை மறுக்க முடியாது.

அவ்வளவு எளிதில் நோய் நொடிகளை அண்ட விடாத சுத்தமான காற்று, மிக சிறந்த ஓவியங்களை கண் முன்னே விரித்து நிற்கும் இயற்கை, சந்தோசங்களில் மட்டுமில்லாது நம் துயர்களிலும் பங்கு போடும் உறவுகளுக்கிடையிலான அன்னியோன்யம், நடை போட வயல் வெளி, நண்பர்களுடன் உறவாட நாற்சந்தி, வருடமொரு முறை ஊர் கூட ஒரு கோவில் என்று  கிராம புற வாழ்வு என்பது முற்றிலும் வித்தியாசமானது.
 
        
ஈழத்தை பொறுத்த வரை மிக பெரும்பான்மையான தமிழர்கள் கிராம புற வாழ்க்கையில் வாழ்பவர்கள் /வாழ்ந்தவர்கள் தான். அத்துடன் ஈழத்திலே தன்னிகரற்ற, பல்வேறு இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட கிராம புறங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.  இங்குள்ள கிராமப்புறங்கள் பெரிதும் விவசாயத்தை நம்பி உள்ளது.

நெற்பயிர்  செய்கையில் இருந்து மரக்கறி உற்பத்தி, தென்னை செய்கை, புகையிலை உற்பத்தி, பழவகை உற்பத்தி  என்று கிராமத்துக்கு கிராமம் மக்கள் விவசாயத்தை நேசித்தார்கள். அத்துடன் விவசாயத்துக்கான நீர் என்பது ஈழ மக்களுக்கு ஒரு கொடையாக கிடைத்த ஒன்று என்று சொல்லலாம். குளமாக இருந்தாலும் சரி கிணறாக இருந்தாலும்  சரி அவ்வளவு எளித்தில் வற்றி போகாதவை.

இவை போக ஈழ மக்களுக்கு பனை மரம் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்து வருகிறது. "கற்பகதரு" என்று அழைப்பதற்கேற்ப இதால் மக்கள் பெறும் நன்மைகள் மிக ஏராளம். படுப்பதற்கு பாயில் இருந்து சீனி தட்டுப்பாடான காலப்பகுதிகளில் தேநீர் குடிக்க கருப்பட்டியாக கூட மக்களுக்கு பயன்பட்டது. ஈழத்தை பொறுத்தவரை 'பனைமரம் ஈழ மக்களின் நண்பன்' என்று சொன்னாலும் மிகை இல்லை.

சிறிமாவின் காலத்தில் மூடிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், அதன் பின் நாட்டிலே  'கடுமையான காலப்பகுதி' நிலவிய போதும் கூட தன்னிறைவு பொருளாதாரத்தில் மக்கள்  தம் வாழ்க்கையை ஓட்டிச் சென்ற சிறப்பும் மேற்படி  கிராமப்புறங்களிடம் உண்டு. உதாரணமாக இயற்கையாகவே வீடுகளிலும் வயல் நிலங்களிலும் கிடைக்கும் முருங்கை இல்லை, முருங்கை காய், அகத்தி இலை, தூதுவளை இலை, குறிஞ்சா இலை  போன்றனவே எம் ஒருநாள் உணவுக்கான தேவையை போக்கக்கூடியனவாக இருந்தது.

இந்த விவசாயம், வயல்வெளி என்று சொல்லும் போது கண்முன்னே விரியும் காட்சிகள் என்றுமே பசுமையானவை. அன்று பாடசாலைக்கு செல்லும் இளைஞன் அதிகாலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று விவசாய நடவடிக்கைகளில் தன் அப்பாவுக்கு ஒத்தாசை செய்த பின்னரே பள்ளி செல்வான். இது ஒருவிதத்தில் அந்த இளைஞனுக்கு தேக பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது.
       
சிறு வயசில் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் காலை காட்சி என்ற தலைப்பில் ஏதாவது சொல்லி தருவார்களே.. ஒரு கிராம புறத்தில் வாழ்பவனால் தான் இதை முழுமையாக உணர்ந்து அனுபவித்திருக்க முடியும்.

அதிகாலை வேளையில் எழுந்து தன் ஊரில் உள்ள வயல் வெளி பக்கம் செல்பவன் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்?


காலை பொழுது ஒன்றில்
வயல் வரப்பு ஊடான
ஒரு பயணம்,
மனதை இதமாக்கும்
இனம் புரியாத அமைதி,
புலர்ந்த பொழுது
மீண்டும் மலர்வதை கண்டு
கானமிசைத்த படி
வானத்தை வட்டமிடும்
பறவைகள் கூட்டம்,
பயிர்களை தழுவி வந்து
உடலை வருடும் மெல்லிய காற்று,
சூரிய கதிர்பட்டு
வானவில் நிறங்களை காட்டி நிற்கும்
புல் நுனி மேல் படர்ந்த
பனித்துளிகள்,
உழவன் கை பிடியில் கலப்பை, அதில்
பூட்டிய காளைகள் அசைந்து நடக்க
அதற்க்கேற்றா போல் தாளம் போடும்
கழுத்தில் கட்டிய சலங்கை ஓசை,
கிணற்றில் இருந்து
வரப்பு ஊடாக இறைக்கும் நீரில்
உரிமை எடுத்து
நீந்தி மகிழும் காக்கை கூட்டம்,
அருகிலுள்ள
ஆலய மணி ஓசையுடன் மந்திர ஒலியும்
காற்றில் தவழ்ந்து வந்து
காதுகளில் தஞ்சமாகும்...,
இத்தனையும் கண்டு உணர
என்ன தவம் செய்ய வேண்டும்...!


மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்வது,
அன்புடன்,
சி.பவன்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!