Tuesday 22 January 2013

யுத்தசாட்சி – 1


மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்

யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே

எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்

உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை

முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை

காடையர்கள் 
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை

கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி 
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி 
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை 
வைத்திருப்போரே 
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு 
நான் சித்தமாயிருக்கிறேன்”
                                 -- மன்னார் அமுதன்

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!