Tuesday 29 January 2013

கோயிலும் கடவுளும்


அந்நாட்களில்
ஏழைகளின் 
கூடாரமாயிருந்தது
கோயில்

கடவுள்
காவலாயிருந்தார்
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்

அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்

நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்

கடவுள் அங்கேயே 
காவலாயிருந்தார்

தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்

மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்

தூண்களைக் கட்டியும்
தூசிகள் தட்டியும்
பாரம்பரியக் கோவிலைப்
பராமரித்தோம்
மழைக்கு ஒதுங்கிய 
மக்களையும்
மஞ்சள் படிந்த 
கடவுளையும் வெளியேற்றிவிட்டு

   -- மன்னார் அமுதன்

1 comments:

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

அருமையான கவிதை அமுதன்... வாழ்த்துக்கள்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!