Thursday 24 January 2013

நானற்ற பொழுதுகளில்


நீ
முட்டியை மடக்கி
முகத்தில் குத்தியதில்
முத்திரை குத்தப்பட்ட
கடிதத்தைப் போலவே
கிழிந்து போயிருந்தது
என் தாடை

மருந்திடச் சொல்கிறாய்
முட்டிக்கு

பெண்ணென்றான பின்
பெரிதாய் என்ன செய்திடுவாய்
எல்லா இராணுவங்களும்
செய்ததைவிட 

அடுப்படியில் கூட
எனக்கான
கருத்தோ கொள்கையோ
கருக்ககட்டக் கூடாதெனும்
கொள்கையோடே வாழ்கிறாய்

விதிமுறைகளை 
என்னிடமும்
விதிவிலக்குகளை 
எல்லோரிடமும்
பேசுபவனே

எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
நானற்ற பொழுதுகளில்
                           -- மன்னார் அமுதன்

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!