Wednesday 6 February 2013

தந்தையாயிருத்தல்


அவருக்கும் எனக்குமான 
உறவுச் சுவரில் 
வேர் பரப்பியிருந்தது
விரிசல் 

ஒரு முறையேனும்
முறை சொல்லி
அழைத்ததாய் நினைவில்லை
கடந்த காலங்களில்

மீசை அரும்பாதவரை
கக்கத்தில் முகம்
புதைத்துக் கிடந்ததைச்
சொல்கிறாள் அம்மா

எனது 
வெற்றிகளுக்காக
தோல்விகளைத் தோளில்
சுமந்தவனென்கிறாள்
பாட்டி

என்
மதிப்பெண்களை
கல்லூரிகளுக்கு 
காவித் திரிந்ததில்
அவரின்
கால் செருப்பு அறுந்த
கதை சொல்கிறாள் தங்கை

சேக்காளிகளோடு
சண்டைபிடித்து
மண்டையுடைந்து வந்தபோது
மருந்திட்டதை ஞாபகப்படுத்துகிறான்
தம்பி

புறக்கணிப்பின்
எல்லாக் கணங்களிலும்
அவர் தந்தையாய் இருந்தார்

நான்தான்
கயிறை அறுக்கும் 
கன்றுக்குட்டியாய்..
                 -- மன்னார் அமுதன்


0 comments:

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!