Friday 22 February 2013

பேயோன்


தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்

கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்

பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்

ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்

வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி

வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்

அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்

அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்

  -- மன்னார் அமுதன்

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!