ஈழ வயலோடு இணைந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,
அரிவரி தொடங்கி, கைதேய மண் மீது அகரம் எழுதத் தொடங்கிய காலங்களிற்கு முன்பாகவே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்து விடுகின்றது. கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்து வரும் போது, என் இயல்புகள் அத்தனையையும் தொலைத்து விட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகம் பாய சிலிர்துப் போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலயித்த சம்பவங்கள் பல உள்ளன.
என் கண் கண்ட தெய்வங்கள், வித்தாக உறங்குமிடத்தில் கார்த்திகைப் பூவின் மாதத்தில் ஒளி வெள்ள மெழுப்பி இசை பாடும் அந்த “எங்கே எங்கே ஒருதரம் உங்கள் திருமுகம் காட்டுங்கள்” என்ற அந்த இசையினால் எத்தனை தரம் தேம்பித் தேம்பி அழுதிருப்பேன்.
காதல் உணர்வுகளில் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றனரே?? அதை விட ஆயிரம் மடங்கு பட்டாம்பூச்சிகளை இசையினால் பரப்பிவிடமுடியும். இதை இசை மூலம் நிரூபித்தவர்கள் பலர், பீத்தோவானில் இருந்து, இளையராஜாவரை என்னை சிலிர்க்கவைத்த இசை ஸ்ரிங்காரர்கள் பலர் உள்ளனர்.
நிகழ்கால எதிர் நீச்சல்களிற்கும், எதிர்கால சவால்களுக்கும் மத்தியில் மனதிற்கு அவ்வப் போது ஆறுதல் தருவது இறந்த கால வசந்தங்களே. அவை எப்போதும் இனி திரும்பி வந்துவிடப் போவதில்லை.
அகரம் கிறுக்கத் தொடங்கிய காலங்கள் அது! "அம்மம்மா எங்கே?" என்று கேட்க; "அம்மம்மா சாமியிட்ட போட்டாங்க!" என்று பதில் வந்தவுடன். கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் அம்மம்மாவை தேடிய காலங்கள் அது. அந்தக் காலங்களில்l தான், என் வீட்டில் அருகில் இருக்கும் அதே நல்லூர் கந்தசுசாமி கோவிலில்த் தான் அந்த இசை என்னும் நாத வெள்ளம், நாதஸ்வரமாகி என் காதுகளில் தேன்பாச்சத் தொடங்கியது. சுவாமியை விட்டு விட்டு, என்னை அந்த ஸ்வர வித்தைகளால் கவர்ந்தவர் லயஞான பூபதி பத்மநாதன் அவர்கள்.
நிகழ்கால எதிர் நீச்சல்களிற்கும், எதிர்கால சவால்களுக்கும் மத்தியில் மனதிற்கு அவ்வப் போது ஆறுதல் தருவது இறந்த கால வசந்தங்களே. அவை எப்போதும் இனி திரும்பி வந்துவிடப் போவதில்லை.
அகரம் கிறுக்கத் தொடங்கிய காலங்கள் அது! "அம்மம்மா எங்கே?" என்று கேட்க; "அம்மம்மா சாமியிட்ட போட்டாங்க!" என்று பதில் வந்தவுடன். கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் அம்மம்மாவை தேடிய காலங்கள் அது. அந்தக் காலங்களில்l தான், என் வீட்டில் அருகில் இருக்கும் அதே நல்லூர் கந்தசுசாமி கோவிலில்த் தான் அந்த இசை என்னும் நாத வெள்ளம், நாதஸ்வரமாகி என் காதுகளில் தேன்பாச்சத் தொடங்கியது. சுவாமியை விட்டு விட்டு, என்னை அந்த ஸ்வர வித்தைகளால் கவர்ந்தவர் லயஞான பூபதி பத்மநாதன் அவர்கள்.
அந்த நாளில் இருந்து உயர் தரம் கற்கும் வரை நான் அந்த நாதஸ்வர இசையினை இரசித்தேன்.ஓலங்களாக காற்றில் வரும் பிசிறுகள் எல்லாவற்றையும், தான் இழுத்து ஊதும் காற்றுக்களால் கீதங்களாக மாற்றிய வித்தகர் அவர். மா நிறம், கூர்மையான கண்கள், கலைக்கான முகம், அகன்ற நெற்றி, நிமிர்ந்த தேகம், எட்டு மூலை வேட்டி, அதன்மேல் இடையில் பட்டுத் துணி, நாதஸ்வர துளைகளைத் தடவும் விரல்களில் மோதிரங்கள் என் கண்களில் இன்றும் நிலைத்திருக்கும் அந்த இசை வித்தகரின்தோற்றம் இது தான். அப்பப்பா இந்த மனிதரால் கோவிலுக்கு வந்த அத்தனை பேரையும் எப்படி அந்த கான இசையினால் கட்டிப்போட முடிகின்றது என என் முகம் ஆச்சரியக்குறியாகிய சந்தர்ப்பங்கள் பல.
"இவன் கோவிலுக்கு வந்து சாமியையா கும்பிடுகின்றான்? பீப்பி, மேளத்தைத் தான் பார்த்துக்கொண்டு அதன் பின்னாலேயே சுற்றுகின்றான்" என என் அக்கா தாத்தாவிடம் முறையிட்டதும், அதற்கு என் தாத்தா அளித்த பதிலும் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. என் தாத்தா ஒரு கலாநிதி. பகுத்தறிவாளனும்கூட, கோவிலுக்கு செல்வதில்லை. என்னிடம் அவர் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்று. "யார் அங்கே நாதஸ்வரம் வாசிப்பது?" என் அக்கா:- பத்மநாதன் என்றதும், அப்படி என்றால் இவன் செய்வது சரிதான். என்றுவிட்டு பத்தமநாதன் பற்றி பல தகவல்களையும் எனக்கு அன்று விரிவாக கூறினார். தன் பேரன் போற்றுதலுக்குரிய ஒரு நாதஸ்வர வித்தகரின் இரசிகனாகிவிட்டானே என்ற பெருமையினை அவர் முகத்தில் அன்று நான் பார்த்தேன்.
யாழ்ப்பாணத்தில் அளவையூர் என்று சிறப்பிக்கப்படும், அளவெட்டி பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவர் பத்மநாதன் அவர்கள். 1931ஆம் அண்டு பிறந்த இவர்,புகழ் பெற்ற கலைஞர்களான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, முல்லை வாசன் முத்துவேற்பிள்ளை, அப்புலிங்கம், ஆறுமுகம்பிள்ளை ஆகியோரால் செதுக்கப்பட்டவராவார். பின்னர் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த சீர்காழி பீ.எம்.திருநாவுக்கரசிடமும், திருச்சி கிருஸ்ணமுர்திப்பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்ப நுணுக்கங்களை கற்றுத்தேர்ச்சிபெற்றார்.
இவரது காலத்தின் பொற்காலம் என்று, இன்றும் ஈழத்தமிழர்களால் நினைவு கூறப்படுகின்ற காலமானது இவரும் உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தெட்சணாமூர்த்தியும் இணைந்து இசை பரப்பிய கால கட்டங்களாகும். இது இவரது 25 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்ததாக அறிய முடிகின்றது.
நான் அறிந்து இவர் வாசிக்கும் போது தவில் மேதை புண்ணியமூர்தி அவர்களும், அதன் பின்னர், அவரது மாணவனும், தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் புத்திரன் உதயசங்கர் அவர்களும் தவில் வாசித்தனர்.
நான் இவரை அதிக தடவைகள் இரசித்தது நல்லூர் தேவஸ்தானத்திலேயே. மற்றும்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை விழாக்களிலும், பிற கோவில் மஹோட்சவங்களிலும் இவரது கச்சேரிகளை பாhத்திருக்கின்றேன். இவர் வாசிக்கும் மல்லாரியை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒருதடவை இசை விழா ஒன்றில் இவர் வாசித்த தில்லானாவை நேரில் பார்த்து நான் இருக்கும் இடமே தெரியாமல் இலகித்து அந்த இடத்தில் நான் இல்லை என்ற உணர்வு நிலைக்கே சென்றிருக்கின்றேன்.
என் இரசிப்பு வெறியாகிய சந்தர்ப்பத்தில் என் தாத்தா ஓர் நாள் இவரது இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்று சந்திக்க வைத்தார். அன்று தான் நான் அவரது வாயினால் வரும் பேச்சினையும் கேட்டேன். அட எவ்வளவு அன்பான மனிதர்! என் தாத்தா; "அவரின் இரசிகன் நான்" என்றதும் என்னை தன் மடியில் இருந்தி கதை பேசினார். என் தாத்தா பற்றி நான் அறியாத பல விடயங்களை என்னிடம் சொன்னார். அந்த பொழுதுகளை இன்று நினைத்தாலும் மனம் பெருமை கொள்கின்றது.
அடுத்து 91 அல்லது 92 ஆம் ஆண்டு கட்டத்திலே அவருக்கு நடந்த மணிவிழாவை என்னால் மறக்கமுடியாது. நல்லை ஆதீன மண்டபத்தில் நடந்த அந்த விழா மிகவும்; சிறப்பாக நடை பெற்றது. பெரிய பெரிய கல்விமான்கள், இசை வித்தகர்கள் எல்லோரும் இவரை புகழ்ந்து பேசினார்கள், தாங்களும் இவரின் இரசிகர் என்றார்கள். அப்பப்பா…! அந்த விழாவே இன்றும் என் மனக்கண்ணில் முழுப் பதிவாக இருக்கின்றது.
அதை தொடர்ந்து நான் மிருதங்கம் கற்ற இசை மன்றத்தினரால் இவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மற்றும் பாராட்டு விழாவில் இவரை புகழ்ந்து கவிதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்கு என் தமிழாசிரியரிடம் உதவி கேட்டேன், உண்மையான கலைஞன் ஒரு 13 வயது சிறுவனின் மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வான். எனவே நீயே எழுத வேண்டும் என அவர் சொல்லிவிட்டார். அன்று ஒரு கவிதை எழுதினேன், வாசித்தேன்..பலர் கைகள் கூட தட்டினார்கள். அது கவிதையா இல்லையா என்று எனக்கு இன்றுவரை தெரியாது.
2003ஆம் ஆண்டு இவர் இயற்கை எய்திய செய்தி அறிந்தேன். அந்த ஆண்டு நல்லூர் திருவிழா பற்றிய ஊடகம் ஒன்றுக்கான ஒளித்தொகுப்பு பெட்டகம் ஒன்றுக்கு இந்த ஆண்டு வழமைபோல் நல்லூரில் எல்லாம் இருக்கும், ஆனால் அந்த தெய்வீக நாதம் இருக்காது என்று உண்மையான கவிதை ஒன்று வாசித்தேன். தற்போதும் கூட நல்லூர் வாசலில் நான் போய் நிற்கும்போதும் நான் இரசித்த அந்த நாதஸ்வர இராகம் தேவாமிர்தமாக என்காதுகளில் கேட்கும். சுவாமி வீதிவலம் வந்தால் அங்கு நாதஸ்வரம் இசைப்பவரை ஏக்கத்துடன் மனம் பார்க்கும். காற்றில் வந்த அந்த கீதம், அந்தச்சூழலில் இன்றும் காற்றில் வந்து கலந்துகொண்டுதான் இக்கின்றது.
நாதஸ்வரக் கச்சேரி ஒன்றிலிருந்து திரு.பத்மநாதன் அவர்களின் கான ஸ்வரத்தினை நீங்களும் பார்த்து மகிழ:
மீண்டும் மற்றுமோர் பதினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது,
என்றும் அன்புடன்,
ஜனா.
|
9 comments:
உங்களது அனுபவம்..இசைக் கலைஞர்களை சந்தித்தது போலவும் நாதஸ்வர இசையை கேட்டது போலவும் இருந்தது..நாதஸ்வர புதியவர் வாசித்தாலே இனிக்கும்..விதவான்கள் வாசித்தால் சொல்லவே வேண்டாம்..காணொளி கண்டேன்..கேட்டேன்..ரசித்தேன்..சுவை..
ஈரோட்டு சூரியன்
வணக்கம்.
மேற்கத்திய இசைகளில் இன்றைய உலகம் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் எமது பாரம்பரிய இசைவாத்தியங்களை ரசிப்பவர்கள் மிகக்குறைவே.
சில இடங்களில் இவ்வாறு-தவில்,நாதஸ்வர கச்சேரிகளைக் கேட்டால் அதை கேலிசெய்பவர்களுமுண்டு.
ஆனால்,நானும் நீங்கள் சொன்னதைப்போலவே.. கோயிலுக்கு சென்றால் தவில்,நாதஸ்வரக்காரார்கலுக்கருகிலேயே போய் அமர்ந்துகொண்டு அவர்களையே சுற்றி சுற்றி வருவேன்.
உங்களின் இப்படியான பதிவுகள் பாராட்டப்படவேண்டியவை.
உங்கள் பதிவு என் கண்களைப் பனிக்க வைத்துவிட்டது..ஸ்ரீ பத்மநாபன் அவ்ர்களின் முகத்தில் மேதாவிலாசம் தெரிகிறது,கருணை வழியும் கண்கள். அவரது வாசிப்பின் லாவகம் தாங்கள் அவரின்பால் கவர்ந்திழுக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை....
போற்றப்படவேண்டிய ஈழத்துக் கலைஞர் வரிசையில் திரு,என்.கே.பத்மநாதனும் ஒருவர்.ஆனால் இவர்கள் தங்கள் வாரிசுகளை தங்கள் அளவிற்குத் தங்கள் வழியில் கொண்டுவரத் தவறிவிட்டார்கள்.நம் நாட்டுப் பிரச்சனையும் இதற்கொரு காரணம்.இவர்களைப்பற்றி நம் பெரியவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள் !
இவரது இசைவெள்ளத்தை நல்லூரில் அனுபவித்திருக்கின்றேன். எங்களுரில் இவர் வாசிப்பது குறைவு. காரணம புகழ்பூத்த தவில் வித்துவான் தெட்சனாமூர்த்தி அவதரித்த இடம் எங்கள் இணுவையூர். இங்கு தவில் - நாதஸ்வர வித்துவான்களுக்கு பஞ்சமே இல்லை. சுந்தரமூர்த்தி குழுவினர், மாக்கையா குழுவினர், உதயநாதன் குழுவினர் என பலர் உள்ளனர். அயலூரில் (கோண்டாவில்) கானமூர்த்தி – பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இருந்தார்கள்.
நான் விரும்பி ரசிக்கும் தவில் மேதை சுதாகர் (பெயர் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்). தெட்சணாமூர்த்திக்கு பிறகு அவர் என்று சொல்வார்கள். தெட்சணாமூர்த்தியின் மகன் உதயசங்கரும் இவரும் ஒரே குறு{ப்.
பார்த்தேன் படித்தேன்...... இதெல்லாம் அவ்ளோ எனக்கு தெரியாது பாஸ்.
ஈழத்து கலைஞர் பற்றிய அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்!!
வணக்கம் ஜனா!அருமையான பகிர்வு! நான் கூட சிறு வயதில் "அவரின்"மகுடிக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்!நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருபத்தாறு நாட்களும் அந்த மேதையின் வாசிப்பைக் கேட்டு அனுபவித்திருக்கிறேன்!
கோயில் திருவிழாக்களிலும் திருமணவீடுகளிலும் நாதஸ்வர, தவில் கச்சேரிகளை கலஞர்களது உடலசைவுகளுடன் நேரடியாக பார்த்து ரசிப்பது ஒரு தனிச்சுவை. தாயக கலைஞரது சிறப்புக்களை நினைவுகூர்ந்ததற்கு நன்றி ஜனா. அந்த அற்புத கலைஞரின் காலத்தில் வாழ்ந்ததே நமக்கெல்லாம் பெருமை.
Post a Comment