Thursday 29 March 2012

எம் தாய் மொழி டமில் ..?

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்!  இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்!  

2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது.  ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது.  அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும் அதே ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவது.   இது நான் அன்றாடம் பார்க்கும் சம்பவவங்கள்.

ஆங்கிலம் கற்பதை தவறு என்று சொல்லவில்லை.ஆனால் நாம் கற்கும் கல்வியே ஆங்கில மொழி மூலம் கற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தோடு ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் மாற்றான் மொழியை கலந்து கதைப்பது அருவருக்கத்தக்கது. நீங்கள் சொல்லலாம் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப இவ்வாறு மாறுவது தவறு இல்லை என்று.ஏற்றுக்கொள்கிறேன்! நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறுவதில் தவறு இல்லை.ஆனால் நாகரிக மாற்றம் என்று சொல்லி நம் மொழியை கலப்படம் செய்ய நமக்கு என்ன உரிமை உள்ளது.

உலகின் அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று ஐநாவின் தரவு கூறுகிறது. இது, கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறந்த மூத்தகுடி நாம் ,உலகில் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று பெருமை பேசிக்கொள்ளும் நம்மை தலை குனிய வைக்கும் விடயம். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தாலே போதும்,  மெல்ல அந்த இனமும் அழிந்துவிடும் என்பது நீங்கள் அறிந்த விடயம். இன்று நம் இனத்தை அழிக்கும் காரியத்தை நாமே செவ்வன செய்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

நான் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமக்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர் சொன்னார் "தன் குழந்தையை- அம்மாவை "மம்மி" என்றும் அப்பாவை "டாடி" என்றும் அழைக்குமாறு சொல்லிக்கொடுப்பதாகவும் நீங்களும் அப்படியே உங்கள் பெற்றோரை அழைக்க வேண்டும் என்றும். அப்பொழுது எனக்கு அவர் சொன்னது பெரிதாக படவில்லை. ஆனால் இப்பொழுது அவர் சொன்னதை நினைக்கும் போது மிகவும் கடுப்பாக உள்ளது, அந்த நேரத்தில் எழும்பி நாலு வார்த்தை கேக்கவில்லையே என்று தோன்றுகிறது. இவ்வாறு ஆசிரியர்களே ஆங்கில மோகத்தில் இருந்தால் மாணவர்கள் எங்கனம்.
அதெப்படி, இங்கிலிசுகாரன் ஆங்கிலத்தில கதைக்கிறான்.பிரான்ஸ்காரன் பிரஞ்சில கதைக்கிறான்.சுவிஸ்காரன் ரொச்சில கதைக்கிறான்.ஏன் சிங்களவர் கூட சுத்த சிங்களத்தில தான் கதைக்கிறார்கள்.ஆனால் நான் தமிழன் என்று சொல்லி மார்பை தட்டிக்கொள்ளும் தமிழன் மட்டும் தன் தாய் மொழியில் கதைப்பதை பெருமையாக எண்ணுகிறான் இல்லை.

கரீபியன் தீவுகளிலே இந்திய வம்சாவளியினர் வாழ்வதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தே இன்று வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் ஒரு தடவை இணையத்தில் படித்து இருக்கிறேன். அப்படி என்றால் நாளை புலம்பெயர்ந்துள்ள தமிழ் சந்ததியின் நிலையும் இது தானே..?

நம் எதிர்கால சந்ததிக்கு என்று விட்டு செல்ல மொழி என்ற ஒன்று மட்டுமே தமிழர்கள் வசம் உள்ளது.அதையாவது சிதைக்காமல் விட்டு செல்வது நமது கடமை.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
கந்தசாமி 

4 comments:

KANA VARO said... Best Blogger Tips

நான் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது //

அடேங்கப்பா, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிறாய்?

Anonymous said... Best Blogger Tips

அந்த காலத்தில பத்தாம் வகுப்பெண்டது இந்த கால பல்கலைகழகத்துக்கு சமம் கொழந்தாய் :)

மகேந்திரன் said... Best Blogger Tips

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..

சோமாலிய நாட்டுக்காரர் தன் எதிரே வருபவர் தன் நாட்டை
சேர்ந்தவர் என்று அறிந்ததுமே... "அவாரியா" என்று ஆரம்பித்து
சிறு துளியேனும் பிற மொழிக் கலப்பின்றி
உரையாடுகிறார்...

மொழி நமது அடையாளம்.. குறைந்தபட்சம் நாம் உரையாடுகையிலாவது
அதன் தன்மையை பாதுகாக்க வேண்டும்..

இல்லையேல் நம் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்பது
நிதர்சனமான உண்மை..

ஹேமா said... Best Blogger Tips

ஆதங்கம் நிரம்பிய பதிவு.பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியவில்லை என்பதே பெருமிதம் சில பெற்றோர்களுக்கு !

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!